காவல்துறை - விமானப்படை வீரர்களுக்கு இடையே பதற்றம் : விசாரணை ஆரம்பம்
புத்தளம் - கற்பிட்டி பகுதியில் காவல்துறைக்கும் விமானப்படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து ஒரு விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் கற்பிட்டிய துப்பாக்கிச் சுடும் தளத்தில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற வெடிகுண்டு அகற்றும் பயிற்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த பகுதியில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் முன் அனுமதி அல்லது அறிவிப்பு இன்றி துப்பாக்கிச் சுடும் தளத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தனர்.
பதற்றமான சூழ்நிலை
பணியில் இருந்த ஏழு விமானப்படை வீரர்களும் ஒரு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரியும் அந்த மூன்று பொதுமக்களின் அடையாளம் குறித்து விசாரித்தனர்.

அவர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும், மற்ற இருவரும் அவருடன் வந்த பொதுமக்கள் என்றும் உறுதி செய்யப்பட்டதுடன் விசாரணையின் போது, இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
வெடிகுண்டு அகற்றும் பயிற்சி நடைபெறும் காலத்தில், சம்பந்தப்பட்ட பகுதி ஒரு பாதுகாப்பற்ற பகுதியாக அப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பொதுமக்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை
மேலும் அப்பகுதிக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு இலங்கை விமானப்படையிடமே உள்ளது.

அதன்படி, இலங்கை விமானப்படை தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அபாயகரமான சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனினும், இந்தச் சம்பவம் குறித்து விசேட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, விமானப்படைத் தளபதி ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |