பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக நாளை மாத்தளையிலும், கண்டியிலும் கையெழுத்துப் போராட்டம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துத் திரட்டும் போராட்டம் நாளையதினம்(05) மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாளை காலை ஒன்பது மணிக்கு மாத்தளையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு கண்டியிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
