பட்ஜட் சமர்ப்பிக்கும் தினத்தில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள சோதனை
எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்படும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருக்கே நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவரும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவாரகள் என அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற சுகாதார பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நாடாளுமன்ற பிரதானிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9 மணி முதல் கொரோனா பரிசோதனைக்கான இந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அத்துடன் அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவரும் இரண்டு தடுப்பபூசிகள் பெற்றுக்கொண்டதை உறுதிப்பத்தும் அட்டை அல்லது அதன் பிரதியை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும் எனவும் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.