பாடப் புத்தக விநியோகம் - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடப் புத்தகங்களை மார்ச் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாடநூல்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று ஹோமாகமவில் உள்ள கல்வி வெளியீட்டு திணைக்கள களஞ்சிய வளாகத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடப் புத்தக விநியோகம்
மேலும் உரையாற்றிய அவர், “இந்த வருடம் ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்குரிய பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
வருடாந்தம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது. ஆனால், இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையினால் 45 வீதமான பாட புத்தகங்கள் அரச அச்சகத்திலும், 55 வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது.”என்றார்.

