தையிட்டியில் தென்னிலங்கை இனவாதிகளை காப்பாற்ற முன்னிற்கும் காவல்துறை
தென்னிலங்கையில் இருந்து வரும் இனவாதிகளைக் காப்பாற்றுவதற்காக ஒரு நீதி கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக காவல்துறையினர் நீர்தாரை வாகனங்களுடன் வந்து நிற்கின்றனர் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி இன்று (10) முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை இனவாதிகள் தங்களுடைய தேவைக்காக பயன்படுத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் தொன்று தொட்டு இருக்கும் விகாரைகளைத் தாண்டி இங்கே இவர்கள் வருகின்றார்கள் என்றால் ஆக்கிரமிப்பும் இனத்துக்கிடையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்து அரசியல் இலாபம் தேடும் நோக்கமேயாகும்.
இறந்த மக்களுக்காக நினைவேந்தல் செய்கின்ற போது அங்கே வந்து காலால் உதைத்த மதுபாசனவின் தலைமையில் இருக்கும் சிங்கள ராவய என்ற அமைப்பே இங்கு வர துடித்துக்கொண்டிருக்கின்றது.
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கே வந்த சிங்கள காடையர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
