நம்ப முடியாத அரசியல் சதிகாரர் பசில் -வாசுதேவ கடும் குற்றச்சாட்டு
அரசியல் சதிகாரர்
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருக்கும் போது எத்தகைய சதியும் நடக்கலாம் எனவும் அவர் நம்பமுடியாத அரசியல் சதிகாரர் எனவும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
ஆபத்தான நிலை
அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் பசில் ராஜபக்ச ஜனாதிபதியாகும் அபாயம் காணப்படுவதாகவும் அப்படியானால் அது மிகவும் ஆபத்தான நிலை எனவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் ராஜபக்ச தீவிர வலதுசாரி நபர் எனவும், அரசியல் ரீதியாக நடுநிலை வகிக்கும் கோட்டாபய ராஜபக்சவை தொடர்ந்து வைத்திருப்பது சாதகமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
21வது திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரதான விடயங்களில் ஒன்று இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படும் எனவும் அது நிறைவேற்றப்பட்டவுடன் பசில் ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் இதன்மூலம் புதியவர் ஒருவரை தெரிவு செய்ய முடியும் எனவும் .வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.