இலங்கையை நேரடியாகத் தாக்கும் சூரியன் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
சூரியனின் வெளிப்படையான வடக்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம் காரணமாக இந்த ஆண்டு ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளில் நேரடியாக இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (28) நண்பகல் 12.11 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில நகரங்களில் சூரியன் மேலெழும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைவுகள்
இதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்நாட்டில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.