ஜேர்மனிய சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது
கண்டியில் அண்மையில் ஜேர்மன் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அந்த பெண்ணும் அவரது அயர்லாந்து ஆண் துணையும் படம் பிடித்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டி சுற்றுலாக் காவல்துறையினரால் நேற்று (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அயர்லாந்து - ஜேர்மன் தம்பதியினர் கண்டி வீதியில் வியாழக்கிழமை (21) இரவு குறித்த நபர்களால் துன்புறுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தை ஜேர்மன் வோல்கர் மடோ என்பவர் காணொளியாக பதிவு செய்து, பின்னர் அவர்களின் வலையொளி தளமான ‘க்ளென்&மேடோ’வில் பதிவேற்றம் செய்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இலங்கையின் சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் சலசலப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர்,
சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
