31 வருடங்களுக்கு முந்தைய கொலை மூவருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை
31 வருடங்களுக்கு முன்னர் நபர் ஒருவரை கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்ட மூவருக்கு இன்று (10) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இந்த மரண தண்டனையை விதித்ததுடன் மற்றுமொருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கம்புகளால் தாக்கப்பட்டு கொலை
1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் நவுட்டுடுவ, கீரந்திடிய பிரதேசத்தில் கம்புகள் மற்றும் தடிகளால் தனபால பெர்னாண்டோ என்பவர் கொல்லப்பட்டமை தொடர்பாக கண்ணுவே பிரதேசத்தில் மேகம்வத்தை கொலனியில் வசிக்கும் ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்த வழக்கில், 3, 4 மற்றும் 5ஆம் பிரதிவாதிகளான வலகெதர, பல்லேகொடவைச் சேர்ந்த மல்முத்துகே தயாரத்ன எனப்படும் ஒலிவர், நாவுட்டுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த அனகிபுர ஆரியரத்ன என்ற லொக்கா, கிரியமத் கன்வான் பகுதியைச் சேர்ந்த கிரிமத்லக்க பெர்னாண்டோ என்றழைக்கப்படும் தர்மதிலக பெர்னாண்டோ ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.
10 வருட கடூழிய சிறைத்தண்டனை
1ஆம் பிரதிவாதியான பேருவளை, கலவில பகுதியைச் சேர்ந்த ரத்னா என்ற அனகிபுர பிரேமதிலக என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் மூன்று இலட்சம் ரூபா நட்ட ஈடும், விதிக்கப்பட்டது. மேற்படி நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

காவல்துறையினரால் கைது
இந்த வழக்கில் 2வது குற்றவாளி, இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே புற்றுநோயால் மரணமடைந்துவிட்டார் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, நாவுட்டுடுவ கீரந்திடிய பிரதேசத்தில் வைத்து கம்புகளால் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை வெலிப்பன்ன காவல்துறையினர் கைது செய்தனர்.