தோற்கடிக்கப்பட்ட பாதீடு - கூட்டமைப்பின் இந்த செயற்பாடு அழிந்து செல்வதற்காகவும் இருக்கலாம்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணை அள்ளிக்கொட்டியிருக்கின்றது. இதனை எதிர்வருகின்ற காலத்தில் புரிந்துகொள்ளுவார்கள் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசியக்கூட்டமைப்போ அல்லது வேறு எந்தொரு கட்சியோ பாதீட்டை எதிர்ப்பதாக இருந்தால் அதற்குரிய காரணத்தை சொல்லவேண்டும்.
வரவுசெலவுத் திட்டத்தொடரிலே முதல்வர் தன்னிச்சை சட்டம் ஊடாக செயற்படுகின்றார் என கூறுவது விடயம் கிடையாது. அரசியல் ரீதியாக நேற்றுமுன் தினம் வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கட்சித்தலைப்பீடம் முடிவு எடுத்துவிட்டனர் எதிராக வாக்களிப்பது என்று.
கூட்டமைப்பின் நிலைப்பாடு
நேற்றைய தினம் சம்பிரதாய பூர்வமாக சபைக்கு வந்து தமது எதிர்ப்பினை உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். 2021 ஆம் ஆண்டு நான் மாநகர முதல்வராக பதவி ஏற்றதன் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் 2022 ஆம் ஆண்டு நடுநிலைவகித்தனர்.
காரணம் உடனடி தோற்கடிப்பு செய்யப்பட்டால் சபை கலைந்துவிடும் என்ற ரீதியாக நடுநிலைவகித்தனர். நான் பதவியேற்று தன்னிச்சையாக செயற்பட்டேன் என்று இல்லை. போனமுறையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிராகத்தான் வாக்களித்தது.
அரசியல் கட்சிகள் தங்களுடைய விருப்புவெறுப்புக்கு அப்பால் தீர்மானம் எடுத்துக்கொண்டன. தங்களுடைய அரசியல் நலனுக்காக தீர்மானங்களை எடுத்துக்கொள்ளுவார்கள்.
வரவுசெலவு திட்டம்
இதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்கள் நலன் என கருதி எதிர்காலத்தில் செல்வாக்கை அதிகரிக்கலாம் என எண்ணி இந்த வரவுசெலவு திட்டத்தை தோற்கடித்தனர். என்னை முதல்வர் பதவியில் அகற்றமுடியும் என எண்ணியிருக்கலாம்.
இது தங்களின் வளர்ச்சிக்காவும், அழிந்து செல்வதற்காவும் இருக்கலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்” என்று தெரிவித்தார்.