கூட்டமைப்பின் எம்.பிக்கள் முதுகெலும்பு அற்றவர்கள் - கடுமையாக சாடிய ஜாஹீர்
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளை முதுகெழும்பு இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹீர்.
அம்பாறை - மாளிகைக்காடு பிரதேசத்தில் தனது அலுவலகத்தில் இன்று(26) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,
பொசன் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு 17 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது. இதனால் ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற கைதிகள் தொடர்ந்தும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது ஒரு வேண்டுகோளாக இருக்கின்றது.
இவ்விடயத்தில் அக்கறை கொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன். அவர் கூட நாடதளுமன்றத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகித்திருந்தாலும் கூட, அவர்களுக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை முதுகெழும்பு இல்லாத அரசியல் வாதிகள் என்று அவர்களை கூறுவேன்.
ஆனால் தற்போது இவர்கள் அரசியல் கைதிகள் அரசியல் நோக்கத்திற்காக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் இவ்விடயம் அப்படி அல்ல.
இந்த நாட்டின் ஜனாதிபதி சிறந்தவர். ஆளுமையுள்ளவர் என்ற அடிப்படையில் அரசியல் கைதிகள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் முஸ்லிம் அரசியல் கைதிகளும் இனிவரும் காலங்களில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும் எனக் குறிப்பிட்டார்.