தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது
புதிய இணைப்பு
தொடருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட காவல்துறையினரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தண்டவாளத்தில் கழற்றப்பட்ட ஆணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்ற நபர் இவரே என்பது காவல்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
தொடருந்து ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே தொடருந்து மார்க்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாகப் பிரதான தொடருந்து பாதையின் போக்குவரத்திற்குப் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாகப் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
பாரிய தடைகள்
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த தொடருந்து தொடருந்தானது, தெற்கு களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு தொடருந்து என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |