சுய தனிமைப்படுத்தலுக்காக இந்தியாவிலிருந்து பலர் இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள்?
இந்தியாவிலிருந்து பலர் சுய தனிமைப்படுத்தலுக்காக இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவ்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கருத்து வெளியிட்டார். covid-19 தொடரின் மூன்றாவது அலை தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா,
இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கு எத்தனிப்பவர்களிடம் பிறிதொறு நாட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சான்றிதழ் கோரப்படுவதாகவும் அதற்காக இந்தியாவை சேர்ந்த பலர் இலங்கைக்கு வரத்திட்டமிட்டிருப்பது தமக்கு அறியக்கிடைத்திருப்பதாகவும் குறித்த செயற்பாடானது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இலங்கையில் தொற்றின் நிலமை இன்னும் மோசமாகக் கூடும் என அவர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகள் போதுமானதாக இல்லாது இருப்பதாகவும் பல இடங்களில் அனுமதிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் 1 மாத காலம் கடந்த பின்னரே வழங்கப்படுகின்றது.
அன்றாடம் கூலித் தொழில் செய்து வருமானத்தை பெற்றுக் கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அதிகாரிகள் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. இங்கு 7084 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 768 தனி நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.