அதிகரிக்கும் கொரோனா - கிண்ணியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை
திருகோணமலை கிண்ணியாவில் கொரோனா தொற்று அதிகரித்து செல்வதை அடுத்து வாராந்த சந்தைகள், புடவைக்கடைகள் மற்றும் ஏனைய கடைகளுக்கு பெண்கள் செல்வது இன்றிலிருந்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளர்கள் சிலர் கிண்ணியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கிண்ணியா நகர சபையின் றஹ்மானியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் அவர்களை அனுமதிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். ஹனி இன்று (04) கொரோனா தடுப்பு குழு கூட்டத்தின் போது குறிப்பிட்டார்
கிண்ணியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் இன்றைய தினம் கூடிய கிண்ணியா கொரோனா தடுப்பு குழுவினால் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பின்வரும் கட்டுப்பாடுகள் இன்றிலிருந்து அமுலுக்கு வருகின்றது.
வாராந்த சந்தைகள், புடவைக்கடைகள் மற்றும் ஏனைய கடைகளுக்கு பெண்கள் செல்வது இன்றிலிருந்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஆண்கள் மாத்திரம் கடைகளுக்கு செல்ல முடியும்.
கடைகளில் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் இருந்தாலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தாலும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு கடைகளும் மூடப்படும்.
வெளி இடங்களில் இருந்து யாசகம் கேட்டு வருபவர்கள் தடைசெய்யபட்டுள்ளனர்.
பள்ளிவாயல்களுக்கு முகக்கவசம் இன்றி வருபவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு அதிகமானவர்கள் முகக் கவசம் அணியவில்லை எனில் பள்ளிவாயல்கள் மூடப்படும்.