திருகோணமலை மேல் நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்பை பேணியோர் உட்பட 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (09) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மேற்படி தொற்றாளர் ஒருவரின் மகன் திருகோணமலை நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் நிலையில் அம்மாணவனின் வகுப்பில் உள்ள ஏனைய மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாடசாலையின் குறித்த வகுப்பை மூடி வகுப்பில் தொற்று நீக்கி தெளிப்பதற்கான நடவடிக்கையை, திருகோணமலை நகர சபை முன்னெடுத்துள்ளது. அடையாளர் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் எண்மரும், அநுராதபுரம் சந்தி, அன்புவழிபுரம், காந்திநகர், நிலாவெளி 10ஆம் கட்டை, பதவிசிறிபுர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பதுளை மாவட்டம் - அலவ பிரதேச வாசியொருவரும் உள்ளடங்குவதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களை பொருத்தமான கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.