கணவனை மீட்டுத்தருமாறு மனைவி கண்ணீர்க் கோரிக்கை!
திருகோணமலை பூநகர் ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இம்மாதம் 09ஆம் திகதி கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்ற நிலையில் 13ஆம் திகதி மாலையிலிருந்து எந்தத் தொடர்புமற்ற நிலையில் உள்ளதாக மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இவ்வாறு காணாமல் போனவர் 6 மற்றும் 1 1/2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான துரைசிங்கம் சஹிந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் குடும்ப கஷ்ட நிலமை காரணமாக கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கொழும்பு குருந்துவத்த பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட தனது கணவரை வைத்தியசாலையிலோ அல்லது சேருநுவர பொலிஸ் நிலையத்திலோ, தனக்கோ அறிவிக்காமல் அவரை குருந்துவத்த பொலிஸார் திருப்பி அனுப்பியது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது கணவர் இதற்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும் 13ஆம் திகதி காலை தன்னிடம் நன்றாகவே பேசியதாகவும் மனைவி தெரிவித்தார்.
தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனது கணவரை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீருடன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக சேருநுவர பொலிஸாரிடம் கேட்ட போது அவை தொடர்பான தகவல்கள் உரிய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
