திருகோணமலையில் ஊடகவியலாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்
திருகோணமலையில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கெலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரான எம்.எச். யூசுப் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த ஊடகவியலாளர் 14 ஆம் திகதி இரவு 11 மணியளவில், தனது பகுதி நேர தொழிலான, CCTV கமரா பொருத்தும் பணியில், கந்தளாய் நகரில் ஈடுபட்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொய்யான செய்தி
இந்த நேரத்தில், இருவர் அவரிடம் வந்து முதலில் தீப்பெட்டி கேட்டு இல்லை என பதிலளித்ததன் பின்னர் பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு பரப்புகிறாய் என குற்றம்சாட்டி கடுமையான வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர், அவர்களில் ஒருவர் உடனடியாக அவரை தாக்க முயன்ற நிலையில், அருகிலிருந்த கடை உரிமையாளரும் மற்றும் பெண் ஒருவரும் ஊடகவியலாளருக்கு உடனடி பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் கந்தளாய் காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மணல் அகழ்வு
கடந்த ஜூலை 13 ஆம் திகதி, சேருநுவர காவல் பிரிவுக்குட்பட்ட தீத்தாந்தட்டி பகுதியில் நடந்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து உழவு இயந்திரங்களோடு ஏழு பேர் கைது என்ற தலைப்பில் இவர் அறிக்கையிட்ட செய்தி தேசிய தொலைக்காட்சிகளிளும் மற்றும் இணைய தளங்களிலும் ஒளிபரப்பானது.
இந்த செய்தியை வெளியிட்டதன் காரணமாகவே தனக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் காவல்துறையில் முறைபாடு செய்துள்ளார்.
சமூக விரோத செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இச்சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தளாய் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

