ட்ரம்பிற்கு பலத்த அடி : புகழ்பெற்ற கட்டடத்திலிருந்து நீக்கப்பட்டது பெயர்
வோஷிங்டன், டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற கென்னடி கலைநிகழ்ச்சி மையக் கட்டிடத்திலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை நீக்கும் பணி தொடங்கியுள்ளது.
கட்டிடம் மற்றும் அதன் செயல்பாடுகளிலிருந்து ட்ரம்பின் பெயரை நீக்குவதற்கு நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவை நீடிக்கக் கோரி கென்னடி மைய நிர்வாகம் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நேற்று (12) ஒரு நீதிபதி நிராகரித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெயர் நீக்கம்
இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் ஒரு குழுவினர் வந்து, ட்ரம்பின் பெயர் கொண்ட எழுத்துக்களை அகற்றுவதற்காக கட்டிடத்தைச் சுற்றி சாரக்கட்டு அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில், டொனால்ட்ட்ரம்ப் இந்த கலை மையத்தின் பழைய இயக்குநர்கள் குழுவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தனது நண்பர்கள் குழுவை நியமித்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
பின்னர் அவர்கள் கட்டிடத்தின் பெயரில் ட்ரம்பின் பெயரைச் சேர்த்தனர். இருப்பினும், இந்தத் தீர்ப்பை வழங்கிய அமெரிக்க மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர், இந்த தேசிய மையத்தின் பெயரை மாற்றும் அதிகாரம் அமெரிக்க காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு நீதிபதி தடை
பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகளுக்காக இந்தக் கலை மையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மூடுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு நீதிபதி தடை விதித்தார்.

அதன்படி, கென்னடி மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து ட்ரம்பின் பெயர் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதன் தலைமை சட்டத் துறை, இனிமேல் நிறுவன ஆவணங்கள், மின்னஞ்சல் கையொப்பங்கள் மற்றும் கடிதத் தலைப்புகளில் டொனால்ட் ட்ரம்பின் பெயருக்குப் பதிலாக கென்னடி மையம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |