FIFA உலகக்கிண்ணத்தில் ட்ரம்பின் அரசியல் தலையீடு! விசாரணைக்கு தயாராகும் EU
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டைத் தொடர்ந்து, அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலரின் பாலோகனுக்கு விதிக்கப்பட்டிருந்த சிவப்பு அட்டைத் தடை நீக்கப்பட்ட விவகாரத்தில், FIFA தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ மீது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் ஜூலை 1 அன்று போஸ்னியா-ஹெர்சகோவினாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றபோது, பாலோகன் சிவப்பு அட்டை பெற்றதால் அடுத்த போட்டியில் விளையாட தகுதி இழந்தார்.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தலையீட்டிற்குப் பிறகு, அவரது இடைநீக்கத்தை FIFA ஒழுங்கு நடவடிக்கை குழு நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களான பாரி ஆண்ட்ரூஸ், லாரா வோல்டர்ஸ் மற்றும் நீல்ஸ் ஃபுக்ல்சாங் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,
சிவப்பு அட்டை தொடர்பான விதி
“உலகக் கோப்பை தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போதே சிவப்பு அட்டை தொடர்பான விதிகளை மாற்றியமைத்தது விளையாட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் எதிரானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும், “ட்ரம்ப் நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino)வும், FIFA - வும் மீண்டும் ஒருமுறை பணிந்துள்ளன” என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தில் இன்ஃபான்டினோ மீது ஃபிஃபா ஒழுக்க நெறிக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசியல் அழுத்தம் இந்த முடிவில் தாக்கம் செலுத்தியதா என்பதையும் ஆராய வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேசிய கால்பந்து சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், ட்ரம்புக்கு FIFA வழங்கியதாகக் கூறப்படும் “FIFA அமைதிப் பரிசு” உள்ளிட்ட அரசியல் நடுநிலையை பாதிக்கும் பிற நடவடிக்கைகளும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
35 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதுகுறித்து FIFA தரப்பில், பாலோகனின் இடைநீக்கத்தை நீக்கியது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சுயாதீன முடிவாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்ஃபான்டினோ மீது விசாரணை நடத்தக் கோரும் கடிதத்தில் இதுவரை 35 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விளையாட்டின் அழகு அதன் நடுநிலைமை மற்றும் வெளிப்படையான விதிகளில்தான் உள்ளது. அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் யார் விளையாட வேண்டும் என்பதை தீர்மானிக்க அனுமதிக்கப்பட்டால், விளையாட்டின் நியாயம் முற்றிலும் பாதிக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |