தோல்வியை ஒப்புகொள்ள வேண்டும்...! ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் நிபந்தனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பேச்சுவார்த்தைகளில் ஈரான் நீண்ட தூரம் கடந்து வந்துள்ள போதிலும் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அவர்கள் முழுமையாக உடன்படுவார்களா என்பதே இப்போதைய கேள்வி எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் பொருளாதாரம்
குறிப்பாக, ஈரானிடம் அணு ஆயுதங்களே இருக்காது என்பதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் ஒழிய ஒருபோதும் ஒப்பந்தம் ஏற்படாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை அசாத்தியமானது மற்றும் பிழையற்றது எனவும் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
இந்த முற்றுகை ஈரானின் பொருளாதாரத்தை முடக்கியுள்ள நிலையில் அவர்கள் தற்போது வேறு வழியின்றிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானியத் தரப்பு
ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான் எனவும் அத்தோடு நாங்கள் விட்டுக்கொடுக்கிறோம் அல்லது தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என அவர்கள் சொன்னால் போதும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானியத் தரப்பு ஏற்கனவே தனது சிவப்புக் கோடுகள் குறித்துப் பாகிஸ்தான் ஊடாகத் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ட்ரம்பின் இந்தச் சரணடைதல் கோரிக்கை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஈரான் முயன்று வரும் வேளையில், ட்ரம்பின் இத்தகைய நேரடி எச்சரிக்கைகள் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |