மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! ஈரானுக்கு விடுத்த மிரட்டலால் பதற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ட்ரூத் சோசியல் பதிவொன்றில் ஈரான் தனது நிலைப்பாடுகளைச் சரியாக ஒருங்கிணைக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், அந்த நாடு அணு ஆயுதமற்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எப்படி என்று தெரியாமல் தடுமாறுவதாகத் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
இன்று காலை வொஷிங்டனில் இருந்து வெளியிடப்பட்ட இந்தப் பதிவில், ஈரானால் தங்களைச் சரியாகச் சீரமைக்க முடியவில்லை என்றும், அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது நல்லது என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையுடன், குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் தான் ஒரு துப்பாக்கியை ஏந்தியிருப்பது போன்ற ஒரு படத்தையும் பகிர்ந்துள்ள அவர், அதில் இனிமேல் தன்னால் மென்மையாக நடந்துகொள்ள முடியாது என்ற தொனியிலான வாசகங்களையும் இணைத்துள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தம்
இந்தப் பதிவானது அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸை கௌரவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு மறுதினம் வெளியாகியுள்ளது.

அந்த விருந்தின் போதும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதில் அரசர் சார்லஸ் தன்னை விடவும் உறுதியாக இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்தத் தொடர்ச்சியான பதிவுகள் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |