மானிப்பாய் பிரதேச சபையின் முறையற்ற செயற்பாடுகள் : உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு
மானிப்பாய் பிரதேச சபையின் கூட்ட அறிக்கை தாமதமாக வழங்கப்பட்டதாகவும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தாததால் உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (18) தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றபோது தமிழீழ விடுதலை கழகத்தின் உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் பகிரதன் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “சென்ற கூட்ட அறிக்கையை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே வழங்குமாறு நாங்கள் கடந்த கூட்டங்களில் கூறி இருந்தோம். கூட்டம் இன்றையதினம் நடைபெற உள்ள நிலையில் எமக்கு சென்ற கூட்ட அறிக்கை நேற்றையதினமே வழங்கப்பட்டது.
ஊழல் மோசடி
இதனால் அறிக்கையில் உள்ள சரி பிழைகளை எம்மால் சரியாக ஆராய முடியவில்லை. கடந்த சபை ஆட்சியில் இலட்சக்கணக்கான பெறுமதியுடைய மின்குமிழ்கள் ஊழல் மோசடி மூலம் காணாமல் போனது. அதை நாங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்தோம்.
கடந்த ஆட்சியில், கமராவை கொள்வனவு செய்வதற்கான கேள்வி விண்ணப்பங்கள் பிரதேச சபையினால் கோரப்பட்டது.
இதன்போது விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப படிவங்கள், ஏலம் இடம்பெற முன்னரே பிரித்து பார்க்கப்பட்டது. இதுவும் ஆதாரபூர்வமாக நிரூபித்தபோது அதனை கடந்த ஆட்சியில் இருந்த தவிசாளரும் ஏற்றுக்கொண்டார்.
உறுப்பினர்கள் வெளிநடப்பு
இது இவ்வாறு இருக்கையில் ஊழல் மோசடிகளில் தொடர்புடையவர்கள் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு, இடமாற்றம் பெற்றும் சென்றுள்ளார்கள்.
அது தொடர்பாக விசாரணைகளும் இடம்பெற்றன. ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நாங்கள் கேட்டபோதும் எமக்கு அது தெரியப்படுத்தவில்லை.
எனவே இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு வேண்டும் என்றே நாங்கள் வெளிநடப்பு செய்தோம்“ என தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
