ஒரே இலக்கத் தகடுகளை கொண்ட இரு மோட்டார் சைக்கிள்கள் - தீவிர விசாரணையில் காவல்துறையினர் (படங்கள்)
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் காரியாலத்தினால் இரு மோட்டார் சைக்கிள்களுக்கு ஒரே வசிப்பிட இலக்கம் கொண்ட இரண்டு இலக்கத் தகடுகள் வழங்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கெக்கிராவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, குறித்த இரு மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் காவல்துறையினரிடம் செய்த முறைப்பாட்டினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இரு மோட்டார் சைக்கிள்களும் கெக்கிராவ காவல்துறைப் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களும் ஒரே வகை , திறன் மற்றும் வர்ணத்துடன் கூடியவை என அறியமுடிகின்றது.
ஒரே பதிவிலக்கம் கொண்ட குறித்த இரு மோட்டார் சைக்கிள்களுக்கும் தனித்தனி குத்தகை வசதிகளை உரிமையாளர்கள் பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்கும் போது ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாகாண எழுத்துகள் கொண்ட இலக்கத் தகடுகளும் மற்றைய மோட்டார் சைக்கிளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாகாண எழுத்துகள் இல்லாத இலக்கத் தகடுகளும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை

ஒரே பதிவு இலக்கம் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மாகாண எழுத்துகள் கொண்ட மோட்டார் சைக்கிள் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. சில வருடங்களுக்கு முன்புதான் மோட்டார் சைக்கிளை வாங்கியதாகவும் தனது மோட்டார் சைக்கிளை வேறு ஒருவருக்கு விற்கவோ அல்லது மாற்றவோ இல்லை என்றும் அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
மாகாண இலக்கத் தகடுகள் இன்றி வழங்கப்பட்ட அதே பதிவு இலக்கத்தைக் கொண்ட மற்றைய மோட்டார் சைக்கிள் மடாதுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது எனவும் அது தரகர் ஒருவர் மூலம் வாங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் ஒரே பதிவு இலக்கம் கொண்ட இரண்டு இலக்கத் தகடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரே மோட்டார் சைக்கிளின் தகவல்கள் அடங்கிய இரண்டு பதிவுச் சான்றிதழ்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அவை தொடர்பான ஆவணங்களும் கெக்கிராவ காவல்துறைப் போக்குவரத்து பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
அநுராதபுரம் மோட்டார் வாகன பரிசோதகரின் பரிசோதனைக்காக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களையும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இது குத்தகை நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையர் அலுவலக அதிகாரிகள் சிலருடன் இணைந்து நடத்தப்படும் மோசடியாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவ காவல்துறை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் மேலதிக காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கெக்கிராவ மாவட்ட நீதவானின் மேற்பார்வையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.