ரஷ்யா அதிக விலை கொடுக்க நேரிடும்- அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை!
ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற முடியுமே தவிர அந்த நாட்டை வீழ்த்த முடியாது எனவும் ரஷ்ய அதிபரால் ஒரு போதும் வெற்றி பெறவும் முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,
உக்ரைனை, ரஷ்யாவால் ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா மோதலால் 20 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். இது ஒரு பயங்கரமான செயலாகும். ரஷ்யாவின் இந்த தொடர் தாக்குதலால் அந்த நாடு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உதவியாக இருக்கும். உக்ரைன் எல்லையில் இருக்கும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளால் பராமரிக்கப்படுகிறார்கள். இதில் அமெரிக்காவும் பங்கேற்று கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
புடினின் இந்த போர் நடவடிக்கையால் பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பெரிய துன்பம் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற உயிரிழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் புடின் தனது கொலைக்கார பாதையில் என்ன விலை கொடுத்தாலும் தொடர்வதில் உறுதியாக இருக்கிறார்.
உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக்காக துணிச்சலாக போராடுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். கொடுங்கோல், அடக்கு முறை, வன்முறை மூலம் அடிபணிய செய்யும் செயல்களுக்கு எதிராக நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம்.
இந்த போரின் வரலாற்றை எழுதும் போது உக்ரைன் மீதான புடினின் போர் ரஷ்யாவை பலவீனமாக காட்டும். மற்ற உலக நாடுகளை வலுவானதாக காட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது.
14ஆவது நாளாக தாக்குதல் நீடித்த போதிலும் ஒரு சில நகரங்களை மட்டுமே ரஷ்யாவால் கைப்பற்ற முடிந்தது.
இந்த போரால் பொதுமக்கள் சிக்கி தவிக்கும் அவல நிலை காரணமாக உலகம் முழுவதும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.