உக்ரைனில் பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த ரஷ்ய வீரர்களின் வெறியாட்டம் அம்பலம்!
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை தெருக்களில் இருந்து கொத்துக் கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களுக்கு தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து ரஷ்ய வீரர்களின் வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக பலாத்காரம் செய்திருப்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன் பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், ரஷ்ய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.