விடாது தாக்குதல் நடத்தும் ரஷ்யா- உக்ரைனுக்கு அழைப்பு விடுத்த நேட்டோ!
பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் திகதிகளில் நடைபெற உள்ள நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜியா, பின்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா குடியரசு ஆகிய நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளன என கிவ் இன்டிபென்டன்ட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இதேவேளை துருக்கியில் நேற்று நடந்த 2-வது கட்ட பேச்சுவார்த்தை முடிவில், கீவ் நகரில் இராணுவ நடவடிக்கை குறைக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செயற்பாடு, உக்ரைன், ரஷ்யா நாடுகள் எடுத்த முடிவுகள் போர் தொடங்கியதற்கு பின்னான மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை. இடமாற்றம்தான் செய்யப்படுகிறது என பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
மேலும், கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைபேசியில் பேசினார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான இராணுவ மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியத்தை இம்ரான் கான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மேலும் இராணுவ மோதல் தொடர்பாக ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அத்துடன், இரு தலைவர்களும் போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாட்டில் உருவாகி வரும் நிலைமை குறித்து விவாதித்தனர் என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று விமான தாக்குதல் சைரன்ஸ் ஒலித்ததாகவும், கீவ் பகுதியில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.