உக்ரைன் தூதரகங்களை திகிலில் உறைய வைத்த மர்மப்பொதிகள்!
ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டுவரும் உக்ரைன் தூதரகங்களுக்கு மர்மப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு மர்மமான முறையில் அனுப்பப்பட்ட பொதிகளுக்குள் மிருக கண்களை வைத்து அனுப்பி வைத்துள்ளதாகவும் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் செயல்படும் உக்ரைன் தூதரகத்திற்கு தொடர்ந்து 6 லெற்றர் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவகத்தில் ஈரப்படுத்தப்பட்ட பொதிகள்

இவ்வாறு அனுப்பப்பட்டிருந்த பொதிகள் அனைத்தும் ஒருவகையான திராவகத்தில் ஈரப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் வாசனையும் வண்ணமும் தனித்துவமாக இருந்தது எனவும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் உள்ள உக்ரேனிய தூதரகங்களுக்கு குறித்த மர்ம பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, சில நாடுகளில் உள்ள துணை தூதரகங்களுக்கும் இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் லெற்றர் வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாக அந்த நாட்டிற்கான உக்ரைன் தூதுவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதுமட்டுமன்றி இதுபோன்ற நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுக்கும் என்பது எங்களுக்கு தெரிந்தது தான் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

இதனிடையே, மாட்ரிட் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திலும் லெற்றர் வெடிகுண்டு போன்ற ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர். தற்போது மிருகங்களின் கண்களை பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவத்தில், அதன் பொருள் என்ன என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை பலத்த பாதுகாப்புடன் வைக்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.