சிறிலங்காவுக்கு ஐ.நா பாராட்டு
சிறிலங்காவில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்களை முடக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுத் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் வரவேற்றுள்ளார்.
சிறி ஜெயவர்த்தனபுர, கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் அண்மைக் காலங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக விளக்கமளித்த ஜெனரல் குணரத்ன, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சுமார் ஒரு தொன் அளவிலான போதைப்பொருட்கள் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
புதிய தலைமைத்துவத்தின் கீழ் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கு பாதுகாப்பு செயலாளர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
போதைபொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் உடனடியாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கை தற்போது காணப்படும் பெரும் தொற்று நிலைமையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் பாராட்டியுள்ளார்.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தலைவர் அலன் கோல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 17 மணி நேரம் முன்