அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் : சிவாஜிலிங்கம் கோரிக்கை
அநுர அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை அலுவலகத்தில் நேற்றிரவு (07.02.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07 ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி - வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாடு
அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி ஐயா, சபாரத்தினம்பிள்ளை ஐயா, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஐயா ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள்.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர எடுத்த முயற்சியை தொடர்ந்து தமிழ்மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும் என்ற அடிப்படையிலே இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அன்றைய யாழ்ப்பாண மேயராக இருந்த நாகராஜா தலைமையிலேயே ஒற்றுமை மாநாடு வல்வெட்டித்துறையில் உள்ள எட்வேர்ட் தங்கவடிவேல் ஐயாவின் வீட்டில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதிய அரசியலமைப்பு
இதன்போது இலங்கை அரசாங்கத்தை நோக்கி ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வைப்பதென்றும் இந்த நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இயங்குவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டு இது தமிழர்களினுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என அறிவிக்கப்பட்ட போது ஆதரவாளர்களோடு இணைந்து வெடி கொழுத்தி பாடசாலை மாணவனாக நானும் மகிழ்ச்சியிலே ஆரவாரப்பட்டதனை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது அநுர அரசிலும் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் நாங்கள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு கட்சிகளிடையே ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை நாங்கள் வைப்போமாக இருந்தால் அது மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும்.
1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான பிரகடனத்திலே இது "வல்வெட்டித்துறையிலே கருவாகி திருகோணமலையிலே உருவாகி" என்கிற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
குறித்த வரலாற்று சம்பவம் இடம்பெற்று 55 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்திருக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - காண்டீபன், பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 23 மணி நேரம் முன்