சப்ரகமுவ பல்கலை மாணவன் உயிர்மாய்ப்பு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி பகிடிவதை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
உயர் நீதிமன்றம்
இந்த நிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அடிப்படை மனித உரிமைகள் மீறல் எனவும் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு எஸ்.துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் த சில்வா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனு எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
