வடக்கு ஆளுநருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கவும் - ரணிலுக்கு அவசர கடிதம்
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அரசமைப்பை தொடர்ந்து மீறி வருகின்றார். அவருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுங்கள் என கடிதம் மூலம் வலிறுயுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் கடிதம் மூலம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
01.12.2022 அன்று திகதி இடப்பட்டு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு,
வடக்கு மாகாண ஆளுநரின் அரசமைப்பு மீறல்
24. 11. 2022 ஆம் திகதிய கடிதத்தின் தொடர்ச்சியாக எழுதுவது,

வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 10. 10. 2018 ஆம் திகதி அன்று ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு 2054 - 2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்ட நியதிச்சட்டம் ஒன்று நடைமுறையில் இருக்கையில்,
அதே விடயத்தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்கிய தற்போதைய ஆளுநர் “மாகாண நிர்வாகம் தொடர்பான மற்றும் நியதி சட்டவாக்கம் தொடர்பான” கேலிக்கூத்தான செயற்பாட்டை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ஏற்கனவே ஒரு நியதிச் சட்டம் நடைமுறையில் இருந்தமை பற்றி அதனை பிரதி பண்ணிய ஆளுநர் மிகத் தெளிவாக அறிந்திருந்தார் என்பது இதனால் வெளிப்படை.
ஆளுநரால் நியதிச் சட்டம் எனக் கூறப்படும் ஆணத்தின் உள்ளடக்கம் 90% மேலே குறிப்பிடப்பட்ட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டத்தை ஒத்ததாகவே உள்ளது.
நியதிச் சட்ட உருவாக்கம்

அதில் உள்ள முக்கிய மாற்றம் “பணியகத்தின் முகாமைத்துவ சபையின் அமைப்பு” தொடர்பானதாகும். ஏனைய உறுப்பினர்களை, தமது நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக, வெளியே இருந்து நியமிக்கும் அதிகாரத்தை தமதாக்கி கொள்வதற்காகவே இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
ஊடக செய்திகளின்படி, தமது வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சுனில் திசாநாயக்க என்பவரை நியமித்தமையும், அவர் பாய்ந்தடித்து பலாலி விமான நிலையம் இம்மாதம் பன்னிரண்டாம் திகதி முதல் மீளவும் சேவைகள் ஆரம்பிக்கும் என ஊடக அறிக்கை வெளியிடப்பட்டமையில் இருந்து வெளிப்படையாகின்றது.
ஆச்சரியப்படும் வகையில் இதுவும் இலங்கையின் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவரான முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திர சிறியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் தமதாக்கிக் கொண்டமையாக காணப்படுகிறது.
இந்த ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசமைப்பு மீறல்களுக்கான குறியீடாகவே இவை அமைவதால் நான் மேலும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை.
இவற்றிற்கு எதிராக தங்கள் மிகத் துரிதமான, சாத்தியமான நடவடிக்கைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன - என்றுள்ளது.