அமெரிக்காவில் உச்சம் தொட்ட மின்கட்டண உயர்வு!
அமெரிக்காவில் மின் விநியோகக் கட்டமைப்பில் நிலவும் தொடர் குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் அந்தக் கட்டமைப்பைச் சீரமைக்கும் பொறுப்பில் உள்ள மின் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு மிகப் பெரிய தொகையை ஊதியமாகப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி 15 மின்சார நிறுவனங்களின் சிஇஓ-க்கள் (CEO) தற்போது சுமார் ஒரு பில்லியன் டொலர் (993 மில்லியன் டொலர்) மதிப்பிலான பங்குகளை அடிப்படையாகக் கொண்ட ஊதியத் தொகுப்பைக் கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் ஒரு டிரில்லியன் டொலருக்கும் அதிகமாக முதலீடு செய்யப்படவுள்ளதால், இந்த அதிகாரிகளின் பங்குகளின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தரவு மையங்களின் அசுரத் தேவையால் நடப்பாண்டில் மின்சாரத்திற்கான தேவை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவில் சராசரி மாதாந்திர மின்சாரக் கட்டணம் இந்த ஆண்டு 10 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சாமானிய மக்கள் பெரும் நிதிச் சுமையை எதிர்கொள்ளும்போது மின் நிறுவனங்களின் சிஇஓ-க்களுக்குக் கோடிக்கணக்கில் ஊதியம் வழங்கப்படுவது நுகர்வோர் நல அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் அமெரிக்காவில் சுமார் 1.34 கோடி வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாக அரசுத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
மக்களின் துயரத்தைப் பயன்படுத்திக் கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றின் முதலீட்டாளர்களும் தங்களின் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |