அமெரிக்காவில் கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களின் விசா : வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் (United States) உயர் கல்வி கற்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் எஃப்-1 விசா விண்ணப்பங்களில், கடந்த ஆண்டு 41% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச நிராகரிப்பு விகிதமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
அதிகபட்ச நிராகரிப்பு
இந்திய மாணவர்கள், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3.31 லட்சமாக உள்ளது.
சீன மாணவர்கள், 2.77 லட்சம் சீன மாணவர்களும், 43,149 தென்கொரிய மாணவர்களும் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர்.
பிற நாடுகளான கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர்.
நிராகரிப்பு விகிதம்
இந்தநிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டில், 7.69 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் எஃப்-1 விசாவுக்கு விண்ணப்பித்ததில், 23% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 முதல் 2023 வரை, இந்த நிராகரிப்பு விகிதம் 25% முதல் 36% வரை ஏற்ற இறக்கங்களுடன் இருந்துள்ளது.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில், 6.79 லட்சம் விண்ணப்பங்களில் 41% நிராகரிக்கப்பட்டுள்ளன.
விசாக்களின் எண்ணிக்கை
அதாவது, 2.79 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்திய மாணவர்களுக்கான எஃப்-1 விசாக்களின் எண்ணிக்கை சுமார் 38% வரை குறைந்துள்ளதுடன் விசா விண்ணப்ப நடைமுறைகளில் கடுமையான விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் நிதி நிலை மற்றும் கல்வி தகுதிகள் கடுமையாக தற்போது பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரித்த நிராகரிப்பு விகிதம், அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
