சிறிலங்கா இராணுவத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
சிறிலங்கா இராணுவத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அதில் நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்த சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தின் முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரால் எஸ்.பி.அமுனுகமவை சந்தித்ததாக சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்து ஜெனரல் எஸ்.பி.அமுனுகம மற்றும் பணியாளர்களுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புதல்
"நிலையான அமைதியை உறுதிசெய்வதற்காக சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை பற்றி அங்கு விவாதிக்கப்பட்டது" என்று அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர், யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் சமூகத் தலைவர்கள் உட்பட பலதரப்பட்ட சமூகங்களைச் சந்தித்து அவர்களின் கவலைகள் மற்றும் பார்வைகளைக் கேட்டறிந்தார்.
"ஜனநாயக இலங்கையை ஆதரிப்பதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவதால், இத்தகைய ஆற்றல்மிக்க குரல்களும் பங்காளிகளும் எமக்கு அவசியம்" என்று அமெரிக்க தூதுவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.