நடைபாதை வியாபாரிகளால் கொரோனாத் தொற்று பரவும் அபாயம்!
வவுனியா நடைபாதை வியாபாரிகளால் கொரோனா தொற்று பரவலடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன்,அரசினால் அமுல்படுத்தப்பட்ட மூன்று நாள் பயணத்தடை இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் நகருக்குள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியின் இருமரங்கிலும் உள்ள நடைபாதையில் மரக்கறிகளை வைத்து விற்பனை செய்துவரும் நடைபாதை வியாபாரிகள் சுகாதார நடைமுறைகளை உரியவகையில் பேணவில்லை என்று குற்றம்சாட்டப்படுகின்றது.
குறிப்பாக முகக்கவசங்களை உரியவாறு அணியாமல் நிற்பதுடன், சமூக இடைவெளிகளும் சரிவர பின்பற்றப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதியில் மரக்கறிகளை கொள்வனவுசெய்யும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை பேணாமல் நெரிசலான நிலமையை ஏற்படுத்துகின்றனர்.
இதனால் குறித்த பாதையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே நகரசபை மற்றும் சுகாதாரபிரிவினர் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
