வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு பகுதி ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் காலை முதல் மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து 7 மாணவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்த சில மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல்
மேலும் மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவ நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். கல்லூரிநிர்வாகம் கூறியே தனியார் மருந்தகங்களுக்கு சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுகவீனம் தொடர்பாக மாணவர்களால் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை அழைத்துச்செல்வதற்காக இன்று காலை மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் சிலர் வருகைதந்திருந்தனர்.
கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாத பெற்றோர்
இருப்பினும் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை மூன்று மணி நேரமாக அவர்கள் பிரதான வாயிலில் காக்க வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் அவர்களாக உள்ளே சென்று உப பீடாதிபதியுடன் கலந்துரையாடி பிள்ளைகளை தங்களுடன் அனுப்புமாறு கோரியிருந்தனர்.

காய்ச்சல் ஏற்பட்டதாக கூறும் மாணவர்கள் தமது சொந்த விடுமுறையில் வீடு செல்ல முடியும் என நிர்வாகத்தால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களிடம் கடிதம் பெறப்பட்டபின்னர் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியர்கள் பரிந்துரைத்தால் மாத்திரமே வீட்டிற்கு செல்ல அனுமதி
இவ் விடயம் தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் கேட்டபோது சுகவீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்கள் பரிந்துரைத்தால் மாத்திரமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியும் என தெரிவித்ததுடன், பெற்றோர்களின் கோரிக்கையின் பிரகாரம் அனுப்ப முடியாது என தெரிவித்தார். அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கினால் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்றையதினம் கல்வியற்கல்லூரிக்கு வருகைதந்த வவுனியா சுகாதார பரிசோதகர்கள் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |