இதன் பின்னரே வவுனியா நகர முடக்கம் தொடர்பில் தீர்மானம்!
வவுனியா மாவட்டத்தில் கொரனா பாதிப்பு அதிகரித்து செல்லும் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 2000 பேரின் முடிவுகளும் வந்ததன் பின்னரே வவுனியா மாவட்டத்தின் முடக்க நிலை தொடர்பில் ஆராயமுடியும் என வவுனியா மாவட்ட செலயகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பில் இன்று அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் கொரனா தொற்று தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது வர்த்தக சமூகத்தினர் உட்பட சில தரப்பினர் வவுனியா நகரின்,வங்கிகள் மற்றும் பாடசாலைகளை முடக்கி கொரனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இதன் போது பிராந்திய சுகாதார பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகரில் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பகுதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரை இதே நிலைப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனினும் 2000 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்ததன் பின்னரே வவுனியா மாவட்டத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஆராயமுடியும் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை வவுனியாவில் உள்ள வங்கிகள் இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளதுடன் சில உபநகரப் பகுதிகளான தாண்டிக்குளம், நெளுக்குளம், கோவில்குளம், பூந்தோட்டம், மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.