ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரி சலுகையை பயங்கரவாத சட்டத்திற்கு மட்டுமல்லாது அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்!
ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் மேற்கொள்ளப்படும் போராட்டமானது எதிர்வரும் திங்கள் கிழமை 1600ஆவது நாளை எட்டுவதை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரி சலுகையை நிறுத்துவது பற்றிய பேச்சின் காரணமாக ஸ்ரீலங்கா அரசில் ஓர் பதட்டமான சூழ்நிலை கானப்படுவதை ஸ்ரீலங்காக அரசாங்கத்தின் நடவடிக்கையில் இருந்து நாம் அறிய கூடியதாகவுள்ளது.
1978 ல் பயங்கரவாத தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசியல் கைதிகளாக சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப்போது ஐரோப்பிய ஒன்றிய எச்சரிக்கையின் காரணமாக 76 சிங்களவர்களுடன் 16 தமிழர்கள் மட்டுமே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும். யுத்தத்தின் போது இலங்கை ஐ.நா மற்றும் இலங்கை நன்கொடையாளர் இணைத்தலைவர்களுக்கும் 2009ல் அரசியல் தீர்விற்கும் உறுதியளித்தது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி பைடன் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் அரசியல் தீர்வை அடைய முடியும். தமிழர்களிடையே 'பொது வாக்கெடுப்பு' எடுப்பதன் மூலம் இந்த தீர்வை அடைய முடியும். எந்தவொரு தீர்வும் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்குள் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை கடந்த 74 ஆண்டுகளாக தமிழர்கள் கற்றுக் கொண்டனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சிங்களவர்களின் அடக்குமுறையால் தமிழர்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர் என்பதையும், கொழும்பின் சலுகைகளால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் என தெரிவித்தார்.