இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்
இலங்கையின் உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக சிறிய ரக வாகனங்களின் விலைகள் குறைந்தது 10 இலட்சம் ரூபாயாவது குறைந்துள்ளன.
குறைந்துள்ள விலை
டொயோட்டா யாரிஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசல், சுஸுகி வேகன் ஆர், டைகாட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் போன்ற நாட்டில் பிரபலமான வகைகளின் விலைகள் 4 இலட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளன.
வாகனம் வாங்க விரும்பும் நுகர்வோர் அவற்றை முன்பதிவு செய்வதற்கு இது மிகவும் ஏற்ற தருணம். சந்தையில் உள்ள பல விற்பனையாளர்கள் ஏற்கனவே நட்டத்தில் வாகனங்களை விற்பனை செய்து வருவதால், எதிர்காலத்தில் விலைகள் மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தற்போதைய சந்தை நிலவரங்களால் விலை குறைவு போக்கு தொடரக்கூடும் என்றாலும், சந்தை ஒரு நிலையான நிலையை அடைந்ததும் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடு
ஐந்து ஆண்டுகால வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட வாகனப் பற்றாக்குறை பெருமளவு தணிந்திருந்தாலும், சந்தையில் எஞ்சியிருக்கும் இடைவெளியை நிரப்ப இன்னும் அதிகமான வாகனங்கள் தேவை.

இருப்பினும், உண்மையான சந்தை தேவையை விட அதிகமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதே தற்போதைய விலை சரிவுக்கு நேரடியாகக் காரணமாக அமைந்துள்ளது.
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலை குறைவுக்கு அரசாங்கம் விதித்த கூடுதல் கட்டணமும் (surcharge) ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பங்களித்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |