இனி நல்ல காலம்தான் - கருணா வெளியிட்ட தகவல்
பிரதமர் இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் எனவும் ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும் என பிரதமரின் மட்டு அம்பாறை மாவட்டங்களின் விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச தைப்பொங்கலை முன்னிட்டு நாட்டிலுள்ள 100 ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கிவருகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள 06 ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் அவர் தெரிவிக்கையில், அன்று தொட்டு தமிழர்களுக்கு என அடையாளமாக இருக்கின்ற ஒரேயொரு சொத்து ஆலயம் ஆகும். அந்த ஆலயங்கள் தேவையான ஆவணங்களுடன் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டியது அவசியமாகும்.இவைகள் இல்லாத காரணத்தினால் பல ஆலயங்கள் நீதிமன்றில் காலத்தைக்கடத்துகின்றன.
முதலில் நாம் ஒற்றுமைப்படவேண்டும். வழக்குகளுக்கு போகக்கூடாது. இருப்பைப் பாதுகாக்கவேண்டும். ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும். அறநெறிவகுப்புகளை ஆரம்பிக்கவேண்டும்.தேர்தல் முடிந்த கையோடு என்னைக் காணவில்லை என பலர் விரக்தியிலிருந்ததுண்டு.ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறினார்கள்.
உண்மை. அரசாங்கம் இப்போதுதான் நிலையான கட்டத்திற்கு வந்துள்ளது. இனி நாம் நிறைய வேலைகளை முடிக்கலாம். கொழும்பிற்குச்சென்று பல அமைச்சர்களையும் சந்தித்துவருகிறேன். விரைவில் நல்லவை நடக்கும். பிரதமர் மதப்பற்றுள்ளவர். குறிப்பாக இந்துசமயத்தில் மிகுந்த பக்தி அவரிடமுள்ளது. ஜனாதிபதியும் சாதகமாக உள்ளார்.
எனவே நாம் சந்தர்ப்பத்தை பயன்படுத்த நாம் ஒத்துழைப்புவழங்கவேண்டும்.எதிர்வரும் சித்திரைமாதம் முதல் துறைசார்ந்து கொழும்புக்குச்சென்று பிரதமரைச்சந்திக்கும் திட்டமுள்ளது.அதற்கு நீங்கள் தயாராகவேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்.
காரைதீவு, திருக்கோவில் வைத்தியசாலைகளை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்பட்டையில் 500 குடும்பங்களுக்கான பனம்பொருள்உற்பத்தி கைத்தொழிலை மேம்படுத்த நிலையத்தை ஆரம்பிக்கவுள்ளேன். பொத்துவில் 60ஆம் கட்டைப்பிரச்சினை நிறைவுக்கு வந்துள்ளது.
அதிலே முயற்சிசெய்து 182 குடும்பங்களுக்கு காணியை வழங்க 14நாள் அறிவித்தல் போடப்பட்டுள்ளது. ஆகவே அப்பிரச்சினையைத் தீர்த்ததில் மகிழ்ச்சி.
30வருடங்களாக செய்யமுடியாமலுள்ள வளத்தாப்பிட்டிக்கு அப்பால் எம்மவரின் காணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காரைதீவு வலயம் தொடர்பாகவும் ஜி.எல்.பீரிசிடம் பேசியுள்ளேன்.எதற்கும் மக்கள் ஒற்றுமையாக எம்மோடு இணைந்திருங்கள்.
இனி நல்ல காலம்தான் என்றார். இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (26) காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வே.ஜெகதீசன் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்து சமயகலாசார திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கு.ஜெயராஜி வரவேற்புரை நிகழ்த்த கலாசாரஉத்தியோகத்தர் என்.பிரதாப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.