யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டகாசம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது வட்டுக்கோட்டை பகுதியில் இன்று (13) மதியம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இன்று மதியம் அந்த வீட்டுக்கு வன்முறை குழுவினர் புகுந்துள்ளனர்.
சிசிடிவி காட்சி
இதனையடுத்து வீட்டிலிருந்த தையல் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, ஜன்னல் கண்ணாடிகள், வீட்டு கதவு, ஒலிபெருக்கி சாதனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களை அடித்துடைத்து சேதமாக்கியதுடன், வீட்டில் இருந்த இரண்டு இலட்சத்து பதினோராயிரம் ரூபா பணம், மூன்று பவுண் சங்கிலி மற்றும் இரண்டு பவுண் காப்பு என்பவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், அயல் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர்.
சந்தேக நபரை கைது
இதன்போது, தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் மன்னிப்பு கேட்பதற்காக வந்தவேளை காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன் ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, யாழில் இன்று (13) ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 16 மணி நேரம் முன்