நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய வாகனங்களை கோரினரா? வசந்த யாப்பா பண்டார விளக்கம்
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு அமைய இந்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
முழு நாட்டு மக்களும் மிகப் பெரிய கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள சந்தர்ப்பத்தில், அப்படியான சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ளும் தேவை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். எவ்வாறாயினும் சில புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் இல்லாத காரணத்தினால், சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பேருந்துகளில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். இதனால், இப்படியான மக்கள் பிரதிநிதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தற்போது அரசாங்கத்திடம் இருக்கும் வாகனங்களையாவது அவர்களுக்கு வழங்குவது நியாயமானது எனவும் வசந்த யாப்பா பண்டார குறிப்பிட்டுள்ளார்.