ஆலயங்களுக்கு அருகிலும் வீதிகளிலும் இறைச்சிக் கழிவுகள் வீச்சு: தளவாய் பகுதி மக்கள் கடும் அவதி
ஏறாவூரில் இருந்து கொண்டுவரப்படும் கழிவு மூட்டைகளைத் தளவாய் பகுதியில் உள்ள ஆலயம் மற்றும் பிரதான வீதிகள், மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டுச் செல்லும் மர்ம நபர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்களைப் பிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைச் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தளவாய் பகுதிகளில் மர்ம நபர்களால் வீசப்படும் கழிவுகள் குறித்துப் பொதுமக்கள், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தளவாய் வட்டார உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை அவர் ஆராய்ந்துள்ளார்.
சுகாதார சீர்கேடுகள்
இதையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏறாவூர் நகர்ப் பகுதியில் உள்ள சிலர், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தளவாய் பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு அருகிலும், புன்னைக்குடா வீதி மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் மலக் கழிவுகளை மூட்டைகளில் கட்டிவந்து வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இதனால் தளவாய் பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்குச் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுத் துர்நாற்றம் வீசுகிறது.
அத்தோடு இந்து ஆலய வழிபாட்டின் புனிதத் தன்மைக்குக் குந்தகம் ஏற்படுகிறது.
பல தடவைகள் இப்பகுதிகளில் கழிவுகளை வீசுபவர்களை இளைஞர்கள் பிடித்து எச்சரித்து, மீண்டும் குப்பைகளை ஏற்றி அனுப்பியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.
இறைச்சிக் கழிவுகள்
ஏறாவூர் நகர சபையால் தினமும் இறைச்சிக் கழிவுகள் ஏற்றிச் செல்லப்படும் நிலையில், அவற்றை நகர சபை குப்பை வண்டிகளுக்குக் கொடுக்காது, தளவாயில் உள்ள ஆலயங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டுச் செல்வதன் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
மிக மோசமான, அருவருக்கத்தக்க இந்தச் செயலைச் செய்பவர்கள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஊடாக ஏறாவூர் நகர சபைக்குத் தெரியப்படுத்துவதோடு, கழிவுகளை வீசுபவர்களைப் பிடித்துக் கொடுப்பதற்குத் தளவாயில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் தயாராக உள்ளனர்.
எனவே, இனிவரும் காலங்களில் கழிவுகளை வீசுபவர்கள் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மீறுபவர்களை அடையாளம் கண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தளவாய் காளி கோயிலுக்கு அருகில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை தொடர்பாகவும், வீதி விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் கழிவுகள் வீசப்படுவது குறித்தும், தளவாய் பகுதிக்குக் கழிவு அகற்றும் வாகனங்கள் வராதது குறித்தும் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உறுப்பினர் நிலாந்தனின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




