அரசாங்கத்தை கவிழ்க்கத் தயார் - மைத்திரி தரப்பு அதிரடி அறிவிப்பு
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபட்டு வருவதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச(Rohana Lakshman Piyadasa) தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பல்வேறு சக்திகளுடன் பரந்த கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பையும் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் செயற்படும் வழிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ரோஹன லக்ஷ்மன் பியதாச, அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினை எதிர்காலத்தில் வலுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் அறிக்கைகள் மற்றும் நடத்தைகளை தற்போதைய அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கி தமது கட்சியை அடக்க அரசாங்கம் முயற்சித்தால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச எச்சரிக்கை விடுத்தார்.
இந்த தருணத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது ‘நாடாளுமன்றத் தேர்தலை’ நடத்தி மக்களுக்குத் தீர்மானம் எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே எனவும், அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுடன் இணைந்து போராட்டத்திற்குத் தயார் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.