இலங்கையை கடக்கும் தாழமுக்கம் - நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை
மழை
இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இலங்கையின் நிலப்பரப்பை விட்டு வடக்கு திசையில் விலகிப்போன தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் கடலில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் இலங்கையை ஊடறுத்துப் பயணிக்கக் கூடிய வகையில் தனது நகர்வை ஆரம்பித்துள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் (டிசம்பர் 25ஆம், 26ஆம் திகதிகளில்) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணக் கடல் எல்லை வரை உயரழுத்தம்

"உயரழுத்தம் யாழ்ப்பாணக் கடல் எல்லைவரை நீடிப்பதால், அம்பாறைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் பெரும்பாலும் திருகோணமலை வழியே இன்று ஞாயிறன்று கரையைக்கடந்து மத்திய இலங்கை ஊடாக மேற்கிலே அரபிக் கடலில் சென்று பயணிக்கும்.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கில் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் தூறலும் சாதாரண மழையும் காணப்படும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள் காலை வரை வடக்கு, கிழக்கில் பரவலாக குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
தாழமுக்கம் இலங்கையை ஊடறுத்து பயணிக்கும்போது, மேகக்குவிப்பு மலையகம், கொழும்பை அண்டிய பகுதிகளை நோக்கியே அமைய வாய்ப்புள்ளது.
இதனால் மேல் மாகாணம், மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையான அதீத மழைவீழ்ச்சி சில மணிநேரங்களிலேயே பதிவாகும் வாய்ப்புள்ளது.
மலையகத்தில் சில இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படவும் ஏதுவான நிலை காணப்படுகின்றது.
ஆபத்தான மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது என்றுள்ளது.
பலத்த காற்று - இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில்100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்