லசந்த விக்ரமசேகர கொலை... சந்தேக நபர் பகிரங்க விசாரணை : எழுந்துள்ள கண்டனம்
அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணை செய்தமை தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை பகிரங்கமாக விசாரணை செய்தமை தொடர்பில் முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் (Saliya Pieris) கண்டனம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட உடனேயே காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்தே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கைது மற்றும் குற்றப் புலன் விசாரணைகள் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

சந்தேகநபர்களை ஊடகங்களின் முன் நிறுத்துவது, அவர்களை வாக்குமூலங்களை வழங்கச் செய்வது மற்றும் அத்தகைய காட்சிகளைப் பரப்புவது பொதுமக்களின் ஒரு பிரிவினருக்கு உற்சாகத்தை அளிக்கலாம்.
ஆனால், இந்த நடவடிக்கைகள் வழக்கு விசாரணை ஆரம்பமானதுடன் இறுதியில் அரசுத் தரப்புக்குப் பாதகமாக அமையும்.
புலனாய்வாளர்களின் நிபுணத்துவம்
இந்தச் சிறுபிள்ளைத்தனமான செயல்கள் காவல்துறையின் பிம்பத்தை மேம்படுத்தாது மாறாக, அவை எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும்.

இது புலனாய்வாளர்களின் நிபுணத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதுடன், முழு அமைப்புக்கும் இழிவு தேடித் தரும்.
நீதியை உறுதிப்படுத்தவும், சட்டம் மற்றும் நடைமுறைப்படுத்தலின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணவும், உரிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதும், விசாரணைகளின் நேர்மையைப் பேணுவதும் மிகவும் அவசியம்“ என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்