வெலிக்கடை சிறைச்சாலை தொடர்பில் அரசின் திட்டம் வெளியானது
வெலிக்கடை சிறைச்சாலையில் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீண்ட கால அடிப்படையில் கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் சுமார் 26300 மில்லியன் ரூபாவை பெறுவதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையை அதன் இடத்தில் இருந்து அகற்றி, ஹொரணை, மில்லேனிய பிரதேசத்தில் 280 ஏக்கர் நிலப்பரப்பில், பத்தரமுல்லையில் சிறைச்சாலை தலைமையகத்தையும், மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்புகளையும் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த மூன்று திட்டங்களுக்கான செலவை வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் குத்தகையில் இருந்து ஈடுகட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணையில் உள்ள மில்லேனியாவிற்கு இடமாற்றம் செய்வதற்கும், பத்தரமுல்லையில் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கும் காணிகளை சுவீகரிப்பதற்கும் சுமார் 3147 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.