ஒட்டுமொத்த அமைச்சர்களும் பதவி விலகியது ஏன் - ஆளும் தரப்பு விளக்கம்
அனைவரும் இணைந்து நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்காகவே நாங்கள் பதவிகளைத் துறந்தோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, பால்மா தட்டுப்பாடு, எண்ணை தட்டுப்பாடு என்பன விரைவில் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்க்க முடியுமென நாங்கள் நம்புகிறோம்.
நம் நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்.
அமைச்சர்கள் பதவி விலகியமை குறித்து அனுர கேள்வி எழுப்புகிறார். எல்லோரும் இணைந்து இந்த பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்காகவே நாங்கள் பதவிகளைத் துறந்தோம்.
அரச தலைவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை, மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வே நமக்கு அவசியம்.
எனவே, போராட்டங்களை திசை திருப்பி 83ஆம் ஆண்டு நடந்ததைப்போன்ற ஒரு நிலையைக் கொண்டுவரவேண்டாம். நாட்டை அழிக்க வேண்டாம். நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும்”.