கொரோனா தடுப்பூசி ஏன் போடவில்லை! முஜிபுர் ரஹ்மான் விளக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பொதுமக்கள் உள்ளாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நியாயமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அதனால் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் வரை கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் இருந்து தவிர்ந்துகொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது அன்றாடம் தொழில் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களாகும். அவர்களுக்கு ஆரம்பமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவேண்டும்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதார பாதுகாப்பை பேணி செயற்பட தேவையான வசதிகள் இருக்கின்றன. ஆனால் இந்த மக்களுக்கு அந்த வசதிகள் இல்லை. அவ்வாறான நிலையில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் ஆரம்பமாக கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது நியாயமில்லை. அரசியல் வாதிகள் மக்களின் சேவகர்கள் என தேர்தல் காலத்தில் அரசியல் மேடைகளில் பேச்சளவில் தெரிவிப்பதில் பிரயோசனம் இல்லை.
அதனை செயலிலும் காட்டவேண்டும். ஒருநாள் தொழில் செய்யாவிட்டால் அந்த குடும்பமே பட்டினியில் இருக்கும் மக்கள் இருக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பமாக தடுப்பூசி ஏற்றிக்கொள்வது எவ்வாறு நியாயமாகும். அதனால் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசியை அன்றாடம் தொழில் செய்யும் மக்கள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு ஏற்றிய பின்னர் அந்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்வேன்.
அதுவரை கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் இருந்து தவிர்ந்து கொள்வேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.