அரசுக்கு சவாலாக மாறவுள்ள பங்காளி கட்சிகள் - நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட முடிவு
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த 10 கட்சிகளின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பத்து கட்சிகளின் தலைவர்களும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த 6 பேர், உதய கம்மன்பிலவின் கட்சி உறுப்பினர்கள் இருவர், வாசுதேவ நாணயக்காரவின் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர், அத்துரலிய ரத்ன தேரர் உட்பட 16 பேர் இவ்வாறு சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும், விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையை வெளியிடுவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், 'ரத ஹரி மக' என்ற பத்து அம்ச தீர்மானத்தை மகா சங்கத்தின் முன்னணி மதத் தலைவர்களிடம் சமர்ப்பித்து மக்கள் மத்தியில் விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த வாரம் கட்சித் தலைவர்கள் கூடி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அத்துரலிய ரத்தன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, கலாநிதி ஜீ.வீரசிங்க, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வீரசுமண வீரசிங்க, கெவிது குமாரதுங்க, டிரன் அலஸ் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
